செவ்வாய், 25 நவம்பர், 2014

மரணத்தின் புன்னகை.


சரிந்த
மரமொன்றைச்
சுமந்தபடி கிளைகள்
உங்கள் வாசலண்டை  வரும்!.
மல்லாந்து கிடந்து
துடிக்கின்ற அதன்
வேர்கள்
பற்றுமிடமில்லாது
பரபரக்கின்றன..!

அதிலுறை
சிறகிலாக் குஞ்சுகள்…
கேவும் குரல் கேட்டுக்
கூடுமாற்ற
வகையற்று
மரம்சுற்றிக் கதறும்,
இருப்பும் வளர்ப்பும்
தொலைத்த பறவைகள்...!

உங்கள் வாசலில்,
பச்சையமற்றுப் பலகிளைகள்
வேர்பற்றிய கவலையோடு….
இலையுதிர்த்துலர்ந்து
சருகாய் 
உங்கள் கால் மிதிக்குச் சரசரக்கும்! 

அழுகையைப்
புன்னைகையுடன் வரவேற்கும்
உங்கள் வரவேற்பறைக் கதவில்
சிலுவையைச் சுற்றியிருக்கும் பாம்பொன்று!   


உயிர்ப்பேரத்தை
ஆரம்பிக்க வசதியாக
எங்கள் மடிகளின் கனத்தை அளக்கும்
உங்கள் பரிசோதனைக் கூடங்கள்…!

அறிக்கைகளைக் கொண்டு
வயமற்றுப் பாரமாய்த் தொங்கவிடப்பட்ட
அதன் நிர்வாணத்தின் மீது அலட்சியமாய்க்
கைகளைத் துடைத்தபடி
எங்கள் வலிகளுக்கு விலை பேசுகிறீர்கள்!

சேமிப்பு…..
பிள்ளைகள் படிப்பு…..
வீடு……….நிலம்….. காடு……… கரை………….
குன்றுமணித் தங்கம்
போதாமைக்கு மிச்ச வாழ்க்கையை அடகு வைத்துக் கடன்….
இவை
எல்லாம் தீர்ந்து நாங்கள் பிழைத்திருந்தால்
ஏன் பிழைத்தோம் என்கிற கேள்வி மிச்சமிருக்கும்!

இறந்து விட்டாலும்
அதற்கும் இருக்கவே இருக்கிறது உங்களிடம்
இன்னொரு பட்டியல் …..!    

இன்மையின்
கண்ணீர் படிந்து
உருகிச் சகதியாய்க்கிடக்கும்
உங்கள் படிக்கட்டுகளை விடக்
கடினமானது உங்கள் இதயம்!
அது
பொறியில் எலியொன்றைப்
பூட்டவும்,
குழியில்
யானையொன்றை
வீழ்த்தவுமே கவனமாய் இருக்கிறது.

விரல்சொடுக்கில்
மீட்க வலிமையுள்ள கரங்களை
விலைபடியாமல்
சொடுக்க அது தயாராயில்லை..!
இடைவெளியில்
பற்கடிப்பும் பிளிறலும்
கிளைகளை இன்னும் அசைக்கும்!

வனம்,
சாம்பல் போர்த்தி
உள்ளெரியும் தன் கழங்குகளை
அணைக்க வழியிலாப்
பேரோலத்தின்
ஊற்றுக்கண் திறக்க,
உங்கள் அறையெங்கும்
பீறிடுகிறது மரணத்தின் வாசனை!

எல்லாம் தீர்ந்துபோய்,
கொடுக்க ஏதுமில்லாததால்
அணைந்த 
மரத்தின்
துணிபோர்த்தப்பட்ட
முகத்தில்
துளிர்த்துறைந்த புன்னகை கேட்கிறது......,

“என் இனிய தேவதூதர்களே……   
சாத்தானிடம் எவ்வளவுக்கு விலைபோனீர்கள் ?“

படம் - நன்றி கூகுள்.



26 கருத்துகள்:

  1. ஆம்! சாத்தானிடம் நிறையவே விலை போய்விட்டோம்! சிறிய விலை அல்ல! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய விலை!

    அருமை ஆசானே! அது சரி மரபிலிருந்து நவீனம்?!!! அசத்துங்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசானே!
      “உங்கள் வாக்குப்படியே எனக்கு ஆகட்டும்“
      நன்றி

      நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    மரணத்தின் புன்னகை.

    ‘ உங்கள் வாசலில்,
    பச்சயமற்றுப் பலகிளைகள்
    வேர்பற்றிய கவலையோடு….
    இலையுதிர்த்துலர்ந்து
    சருகாய்
    உங்கள் கால் மிதிக்குச் சரசரக்கும்!’
    சருகு சரசரக்கும் சத்தம் கேட்டு பார்த்தேன்... உருகியதே நெஞ்சம்....
    உந்தன் கவிதையில் மனது தஞ்சம்...மரணத்தின் புன்னகை மிஞ்சும்..விஞ்சும்...எஞ்சும்!

    நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அய்யா,
      உங்களின் பின்னூட்டத்தில் இயைபு கூத்தாடுகிறதே!
      நெஞ்சம் உருகிற்றா..?
      அது தப்பாச்சே..!
      பார்த்துக் கொள்ளுங்கள் !
      நன்றி

      நீக்கு
  3. மருத்துவர்கள் என்ற சொல்லையோ, சிகிச்சை என்றோ சொல்லாமல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! போங்கண்ணா!! ஓவரா தான் பண்ணுறிங்க:(((
    அந்த மருத்துவர்களை விட கொடுமைக்காரர் நீங்க தான். பின்ன இதுக்கு பின்னூட்டம் இட வார்த்தைகளே இல்லாமல் இப்படியா அத்தனையையும் கொள்ளையடித்துப் போவீர்கள்:))) சான்சே இல்ல!!!! செம! செம! செம!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சொல்லலை இல்ல!
      தோழர் மதுவின் இது தொடர்பான பதிவொன்றே இதற்கு விதை அதை மரமாக்கி வளர்த்து வெட்ட இவ்வளவு நாளாயிற்று.
      இன்னும் கொஞ்சம் நாள் வளரவிட்டிருக்கலாமோ என வெட்டிய பின்தான் தோன்றிற்று.
      இருக்கட்டும் !
      என் சுருக்குப்பைகளில் ( கைப்பை எனக்கு பயமூட்டக் கூடியது என்பதை மனங்கொண்ட புரத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. அதனால் உங்கள் கைப்பைகளில் என் பின்னூட்டம் இல்லாமல் இருந்தது) உள் சேர்ந்த இன்னொரு அனுபவமாய் இதை நினைத்துக் கொள்கிறேன்.

      சரி சரி நீங்க சொன்னதை எல்லாம் உண்மைன்னு நம்பி இப்படி சீரியஸா பின்னூட்டம் போட்டுகிட்டிருக்கேன்....


      “ என்னைய வைச்சுக் காமடி கீமடி பண்ணலையே “

      நீக்கு
    2. காமெடி பண்ணுற மாதிரியா எழுதிருக்கீங்க!! நெஜமாவே கண்ணுல தண்ணி வந்துடுச்சு பாஸ்:((((((
      இப்போ நான் இனி எழுதுவதை எல்லாம் கவிதைனு சொல்லலாமான்னு டவுட் டா இருக்கு.!!!!! என்னொரு சொல் நேர்த்தி!! ஆழம்!! (நீங்க சொன்ன மாதிரியே கம்மென்ட் போட்டுட்டேன். எப்போ ட்ரீட் தரீங்க:)))) j.k :)))

      நீக்கு
    3. வெங்காயம் உரித்துக் கொண்டே படித்திருப்பீர்கள் போல..!
      வெம்மையான காயம் அதாவது உயிர்ச்சூடுள்ள உடம்பு, அதை உரித்தல்... உடலுணர்வு அற்று ஒன்றுதல்------ இப்படியும் விளக்கம் சொல்வோமில்ல..?)
      //நான் இனி எழுதுவதை எல்லாம் கவிதைனு சொல்லலாமான்னு டவுட் டா இருக்கு.!!!!!//
      அது எப்படி நான் உங்களது எழுத்துகளைப் படிச்சு மனசில நினைச்சது உங்களுக்குக் கேட்டது...?
      ஹ ஹ ஹா!
      ட்ரீட்..
      இதுக்கு ஒரு வெண்பா எழுதாம இப்படி பின்னூட்டம் இடுவதை விட வேற ட்ரீட் ஏதும் இருக்கா என்ன!
      நன்றி

      நீக்கு

    4. **இதுக்கு ஒரு வெண்பா எழுதாம இப்படி பின்னூட்டம் இடுவதை விட வேற ட்ரீட் ஏதும் இருக்கா என்ன!**
      ஹா...ஹா...ஹா...:)))))
      ஓகே நானும் கலாய்ச்சேன், நீங்களும் கலாய்ச்சுட்டிங்க!! பதிலுக்கு பதில் சரியா போச்சு!!
      _____

      இனி இந்த கோட்டை தாண்டி நான் வரமாட்டேன். நீங்களும் வரகூடாது. ஆமா சொல்லிட்டேன்.be careful (நான் என்னைய சொன்னேன்.அவ்வவ்வ்வ்வ்)

      நீக்கு
    5. **வெம்மையான காயம் அதாவது உயிர்ச்சூடுள்ள உடம்பு, அதை உரித்தல்... உடலுணர்வு அற்று ஒன்றுதல்------ இப்படியும் விளக்கம் சொல்வோமில்ல..?)**மிடில பாஸ்:((( ரூம் போட்டு யோசிப்பிங்களா!!!!

      நீக்கு
  4. வெட்கத்தை விட்டு ஒப்புக் கொள்ள வேண்டும். முதலில் விறுவிறுவென படித்துவிட்டு பாடுபொருள் இதுவெனப் புரியாமல் விழித்தேன். ( என் ஞானம் அவ்வளவுதான்) மைதிலியின் பின்னூட்டம் படித்ததும் பொறி தட்டியது. பிறகு இன்னொரு முறை மெதுவாகப் படித்தேன், வரிக்கு வரி --- ரசித்தேன்-இல்லையில்லை - அனுபவித்தேன்.
    இந்தக் கவிதையில் என் வலி நிறைந்த அனுபவமும் நிரவிக் கிடக்கிறது.
    மீண்டும் ஒருமுறை படிக்கிறேன் - கண்ணீர் மல்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா,
      கவிதைக்கு இந்த இருண்மை இருக்கக் கூடாதுதான்.
      நிச்சயம் புதிய வடிவத்தில் பிள்ளை முயற்சி தான் இது!
      தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடம் மறக்காதுதானே!
      வேண்டுகோளை ஏற்று வருகை தந்ததற்கும் கருத்திட்டதற்கும் நன்றி அண்ணா!

      நீக்கு
  5. பின்னூட்டமிடவே வார்த்தைகளைத் தேடி ஓய வேண்டியிருக்கிறது..
    அற்புதம்
    தொடர்ந்து வரட்டும் கவியாறு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எப்படி தோழர்..
      எல்லாவற்றையும் புதுமையாகவே யோசிக்கிறீர்கள்...!
      ஐந்து கவிதைகள் முடித்துவிட்டேன் ஆறாவது வரட்டும் என்று தானே வரட்டும் கவி ஆறு என்கிறீர்கள்!
      எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களோ?

      நன்றி!

      நீக்கு
  6. ஆம் மரணத்தில் புன்னகை பூக்கும் தாராளம் மலிந்து கிடக்கும் நம் லோகத்தில் புழுதிக்குள் அழுது புலம்பும் அவலநிலை காட்சிக்கு தடை தொ(ல்)லைகாட்சிக்குள் காசிற்கு மனம் கருத்தரிக்கும் ஓசிக்கு கழுத்தறுக்கும் குணம் காலாவதி மருந்துக்கும் மாற்று கந்தைக்கும் பலியாகுதே தினம் ....
    என் மனதில் எழுந்த கொந்தளிப்பின் ஒரு துளி நண்பரே தங்கள் கவிதையின் தாக்கம் ஆழ பதிந்ததால் உண்டான வலி நெஞ்சம் நிறைக்கிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தைகள் அறுந்து துடிக்கிறதே அய்யா!
      “மதனிமார் கதை “கோணங்கி அவர்களின் நூல் வாசிக்கும் பழக்கமுண்டோ?
      உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தைகள் படித்திருக்கிறீர்களோ?
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
    2. வணக்கம் அய்யா
      வார்த்தைகள் அறுந்து துடிக்கிறதே அய்யா!///

      எனக்கு இதன் பொருள் விளங்வில்லை தவறாக ஏதேனும் பதிந்து விட்டேனோ என்ற ஐயமே எஞ்சி நிற்கு

      சத்தியமாக சொல்கிறேன் அதிகம் புத்தகம் படித்தது கிடையாது இப்பொழுது தான் நாவல்கள் சில படித்து கொண்டிருக்கிறேன் மற்றபடி தாங்கள் நூல்களை தற்பொழுதே அறிந்தேன் தங்கள் வாக்கில் ...
      தவறாக இருப்பின் மன்னிக்கவும் அய்யா...

      நீக்கு
    3. அய்யோ நண்பரே,
      இவை என் நூல்கள் அல்ல.
      தமிழில் ஒரு சாரரால் பெரிதும் போற்றப்படும் எழுத்தாளர் அவர்.
      உங்களின் நடையில் அவரது சாயல் தெரிந்தது என்பதால் கேட்டேன்.
      உங்கள் வாக்கியங்களை அறுத்துப் பொருள் காண முடியாமல் இருக்கிறது.
      அறுத்தால் சொற்கள் துடிக்கின்றன.
      அவை உணர்த்தும் பொருளை என்னால் கணிக்க முடியாமல் இருக்கிறேன்.
      கோணங்கி இப்படித்தான் எழுதிப்போவார்.
      நிஜமாய் எனக்குப் புரியாத நடை அவருடையது.
      தங்களின் மனதைப் புண்படுத்திவிட வில்லையே?
      இந்தத் தளத்திற்கு வருவோர் மிகக் குறைவு!
      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. அறுந்து துடிக்கிறது என்றவுடன் சற்று பதறிவிட்டேன் தவறு செய்து விட்டோமோ என்று அதுதான் அய்யா மற்றபடி ஒன்றுமில்லை (மேலே தாங்கள் சொன்ன நூல்களை என்பதை //தாங்கள் நூல்களை என்று எழுதிவிட்டேன் மன்னிக்கவும் )

    மனதில் ஓடியது அப்படியே பதிந்தேன் வேறெதுவும் இல்லை அய்யா ....

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் தீர்ந்து நாங்கள் பிழைத்திருந்தால்
    ஏன் பிழைத்தோம் என்கிற கேள்வி மிச்சமிருக்கும்-----அப்போதும் கேள்வியாவது மிச்சமிருக்கிறதே......!!!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா!
    இத்தனை தாமதமாக உங்கள் பதிவைக் கண்டுள்ளேனே என்று.
    மனம் கவலையுறுகிறேன்!..:(

    பேரமும், ஊழலும், லஞ்சமும் நிறைந்த காட்டுமிராண்டி
    வாழ்க்கைத் தனத்தை எத்தனை இயல்பாக எழுதிவிட்டுப்
    போயுள்ளீர்கள் ஐயா!..

    ”மல்லாந்து கிடந்து துடிக்கின்ற மரம்” இந்த அடி ஒன்றே
    அத்தனை வலிகளையும் ஒன்று சேர்த்துக் காட்டி நிற்கின்றது!

    மனம் அழுத்திப் போகும் சொற்களுடன்
    கவிதை உணர்வில் சோகத்தின் உச்சம்!..
    வதைக்கின்ற வரிகள் வழியவிட்டன கண்ணீரை
    என்றாலும் மனதில் பதிந்த கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  10. புதுமை இங்கும் படைகிக்றீர்களா?

    மரத்தையும் மனிதத்தையும்
    ஒப்பிட்டு ஒரு மகத்தான பதிவு !
    படிக்கட்டுகளை விடவும் பாறாங்கல்
    லுன்னிதயம் விலை போகாமல்
    விரல் சொடுக்காது அப்பப்பா ......அரூமை சகோ அருமை! அசத்துங்க.

    பதிலளிநீக்கு
  11. மனம் கொண்ட புறத்தில்
    கணம்கொண்ட வரிகள்

    அருமை அருமை இன்றுதானே இதையும் பார்த்தேன் இனி வருவேன் தொடர்ந்து

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. எல்லாம் தீர்ந்துபோய்,
    கொடுக்க ஏதுமில்லாததால்
    வார்த்தை விளையாட்டு அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.