வியாழன், 7 ஆகஸ்ட், 2014

உயிர்ச்சிற்பம்




எந்தப் பறவையோ
இட்ட எச்சத்திலிருந்து,
மலையில் தெறித்த
விதையொன்று,
யாரும் காணாப் பெருவெளி விழுந்து
கண்திறக்கிறது!
தன்னை உணரத்
தன்னுயிர் காக்க
உறை வெடித்தெழும் 
வேர் உதைத்து
மலை பற்றப் போராடும்!

கிள்ளிடத் துண்டாகும்
மென்மையைப்
பாறைதுளைக்கும்
வலிமையாக்கும்
புறக்கணிப்பிலிருந்தே
புறப்படுகிறது,
துளிர்த்தலின் ஆவேசம்!

நசுக்கத் துடிக்கும்
விரல் தறிக்கவும்
விரல் தரிக்கும்
கைவீழ்த்தவும் எனத்
தொடங்கிற்று 
‘இருத்தலுக்கான‘ போர்!

இறுதியில்
ஊதித்தள்ளி,
உண்டு கொழிக்க,
ஒன்று கூடிப் பொருது,
நாசொட்டிக் காத்திருந்த
கருணையில்லாப் பூதங்களின்
தோலுரித்துச் செய்த
ஜெயபேரிகை முழவதிர
முகடுகள் நடுங்கும்!
அவை
அலறப் பெருகும்
எதிரொலிப்பில்,
அங்குறங்கிச் சுகிக்கும்,
கூழைமேகங்கள் 
வாரிச் சுருட்டி எழுந்தோடும்!

மரம்,
அதன் கனியால் அறியப்படுமென்பது
மானுடக் கவலை!
மலடற்றதென்னும்
நிரூபணத்தோடு
கூடுகட்டும் வார்ப்பினுள்
முள்ளே கிளைத்துக்
கசப்பே நிறையினும்
நேசித்தாக வேண்டுமே படைப்பாளி!

காலம் உருக்கிய
கடுந்தவம் முதிரச்
சொட்டுநீர் வேண்டி
இரந்த வேர்களில்
பருவம் பழுக்க,
தாகம் அடங்கா
தன் மோகம் தீர்க்கச்
சீற்றத்தோடு வரும்
மழை!

கூடிக் கலந்து,
கூடுகள் கலைந்து,
மூச்சு முட்டப் புணர்தல் ஆவேசம்!
மெல்ல மெல்லச் சூடேறி
திரளும் உடற்சுழிப்பில்
சுயம் கரையும் !

உச்சத்தில் இடியிறங்கத்
தீ பிடித்து,
வெளியெங்கும்
ஒளிபரப்பி,
வேரொடு வீழ்தல் சுகம்!
அது,
தான் உதிரும்
வேதனை அறியா
தனிப்பேரின்பம்!

வேர்நுழைந்தறிந்த,
இரகசியங்கள் வெளிப்பட,
மலை,
பாறையாய்ச் சிதறுண்டுச்
சரிவிறங்கிக் கற்களாய்ப் பரக்கும் 
திசையற்று...!
தன்வயமற்ற உருண்டோடலில்
கற்கள் துகள்களாகும்! 


அடிவாரத்தமர்ந்தபடி,
அறிவார்ந்த புன்னகையோடு,
அம்மணல் குழைத்து
உயிர்ச்சிற்பம் வடிக்கிறான் கடவுள்!

சதைவளரத் திறந்து மூடும்
அதன் சிவந்த அலகுகளில்
வாய் நுழைத்து,
உடல் குலுக்கி உணவூட்ட
அனிச்சை உணர்வெழ
எங்கிருந்தோ
சரேலென இறங்கி வருகிறது
அடைப் பறவை!


கலந்த
உயிர்க்குழம்பின்
மையச் சுருள் மெல்ல விரிய
கால் மடக்கி
வான் மோதிடச்
சிறகுயர்த்துகிறது
புதிய உடல்!

5 கருத்துகள்:

  1. ஒரு தளம் எழுப்பிய ஆலைகளே இன்னும் ஓயவில்லை அதற்குள் இன்னொரு தளம் ....
    வ்ம்ம்ம்ம்ம்ம் மிடில
    வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் எனது முதல் பின்னூட்டக்காரரே!
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் பெரி்தும் மகிழ்கிறேன்.புதுக்கோட்டையில் ஊமைக்கனவுகள் எனும் தளத்தைத் தொடங்க முயன்று முயற்சி கைவராமல் வேறு முகவரி முயலக் கிடைத்ததுதான் மனம்கொண்ட புரம்!
      கடைசியில் இரு தளங்களுமே பதிவாகி விட்டிருந்தன!
      மனம்கொண்டபுரத்தின் இலக்கு வேறு !
      எவ்வளவு முடியுமெனத் தெரியவில்லை!
      பார்ப்போம்!
      நன்றி!

      நீக்கு
  2. வணக்கம் ஐயா!

    வலைத்தளம் கண்டு வாய் பிளந்து நிற்கின்றேன்.
    புனரமைத்தீர்களோ... புதிதாய்த் தொடங்குகிறீர்களோ...
    எதுவெனினும் என் அறிவுப் பசித் தேடலுக்கு
    நல்ல உணவு நிச்சயம் உங்களிடம் - இவ்வலையில் கிடைக்கப் போகிறது. போகிறதென்ன கிடைத்துவிட்டது! மிக்க மகிழ்ச்சி!

    `உயிர்ச் சிற்பம்` உணர்ந்து படித்தேன்!
    ஆனந்தம் தான் ஐயா! மிக அருமை!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாரையும் வாழ்த்தும் நல்ல மனம் உங்களுக்கு!
      ஏற்கனவே சொல்லி இருக்கிறோனோ?
      எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

      நீக்கு
  3. கவிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.